LATEST NEWS
“கண்ணீருடன் தாலியைக் கழற்றிய பெண்… நீதிபதிகளையே நிலைகுலைய வைத்த சம்பவம்.. ஸ்தம்பித்த உச்ச நீதிமன்றம்”..!!
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு வழக்கு, அண்மையில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், வழக்கறிஞர்கள் எவருடைய உதவியுமின்றித் தனக்காகத் தானே வாதாடினார். அவர் தனது வாதத்தின்போது, இந்த நீண்டகால இழுபறியால் தனது ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். மேலும், தன் பிள்ளைகளுக்கு அன்றாட உணவை வழங்குவதற்கும், அவர்களின் பள்ளிப் படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கும் கூடப் பணமின்றித் தவித்து வருவதாகத் தனது வாழ்வாதாரப் போராட்டத்தை நீதிமன்றத்தில் விவரித்தார்.விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி, இதற்காகப் பணம் செலவழித்து நேரில் வரத் தேவையில்லை, ஆன்லைன் மூலமே பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தினார்.
ஆனால், தனது வேதனை ஆன்லைனில் விவரிப்பதை விடப் பெரியது என்று கூறிய அப்பெண், திடீரெனத் தன் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றிக் காண்பித்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் நிலையை உணர்ந்து அவரை அமைதிப்படுத்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவரது வழக்குக்கு அடுத்த வாரமே சிறப்பு அமர்வில் முன்னுரிமை தந்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார். நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் சுமார் 800 பழைய சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காகத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் உருவாக்கிய நான்கு சிறப்பு டிவிஷன் அமர்வுகளில் ஒன்றாக இந்த வழக்கு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தாலியைக் கழற்றிக் காட்டிய அந்தப் பெண்ணின் பின்னணி மற்றும் வழக்கு குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையிலும், உச்ச நீதிமன்ற அறையில் நடந்த இந்த உருக்கமான சம்பவம் தற்போது சமூகத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
