DISTRICT NEWS
இப்படியா சீரழிவது..? கஞ்சா வாங்க பணம் தராததால்… 21 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கிணற்றில் சடலமாக மீட்பு..!!
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரவீன். 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு கணினி பயிற்சி பெற்று வந்த இவர், கடந்த சில காலமாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா வாங்குவதற்காகத் தனது பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதியும் வழக்கம்போல போதைப்பொருள் வாங்கப் பெற்றொரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அதற்குப் பெற்றோர் பணம் தர மறுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சய் பிரவீன் வீட்டை விட்டு வெளியேறி அதன்பின் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன இளைஞரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இளைஞரின் உடல் மிதப்பதை அப்பகுதி பொதுமக்கள் கண்டறிந்தனர். இது குறித்து உடனடியாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், இளைஞரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சஞ்சய் பிரவீன் கிணற்றில் குதித்து உயிரிழப்பதற்கு முன்பு தனது கையில் கல் ஒன்றைக் கட்டியிருந்தது தெரியவந்துள்ளது. எனினும், அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளைஞரின் போதைப்பழக்கம் மற்றும் மரணத்தின் பின்னணி குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
