CRIME
“அய்யோ கடவுளே… கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் கொடூரம்!” — 2 முதியவர்களுக்கு நேர்ந்த சோகம்.. கோவையை உலுக்கிய சம்பவம்..!!
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு மற்றும் உப்பு தோட்டம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 10 அன்று பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொசு மருந்து அடிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அப்பகுதியைச் சேர்ந்த மோகன் (65) மற்றும் ராணி (75) ஆகிய இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பணியாளர்கள் குறைவான தண்ணீரில் அதிக அளவிலான மருந்தை கலந்து அடித்ததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படியே 400 மீட்டர் சுற்றளவிற்கு மருந்து அடிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார். இருப்பினும், பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக மக்கள் அறிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உயிரிழந்த இருவருமே ஏற்கனவே நுரையீரல் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளால் தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் நோயின் தீவிரத்தாலேயே உயிரிழந்தனர் என்றும் செயல் அலுவலர் விளக்கமளித்தார்.
உயிரிழந்த மோகன் குடிப்பழக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பிரேமா (ராணி) நுரையீரல் நோய் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் மருத்துவமனைத் தகவல்களைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கொசு மருந்து தெளிக்கப்பட்ட உடனேயே இந்த மரணங்கள் நிகழ்ந்ததால், தங்களது சந்தேகங்கள் தீரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
