LATEST NEWS
“என் உயிர் போனாலும் பரவாயில்லை..! மரணத்தின் விளிம்பிலும் ரியல் ஹீரோவாக மாறிய வேன் டிரைவர்…” கடைசி நிமிஷத்துலயும் பள்ளிப் பிஞ்சுகளின் உயிரைக் காத்த சண்முகசுந்தரத்தின் நெகிழ வைக்கும் தியாகம்..!!
கோவையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் மனவுறுதியுடன் செயல்பட்டு, பள்ளி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்கூல் வேன் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பலரும் மனிதநேயத்துடன் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற முதியவர், அங்குள்ள தனியார் நர்சரி பள்ளியின் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பள்ளிக் குழந்தைகளை வேனில் ஏற்றிக்கொண்டு அவர்களைப் பத்திரமாக இறக்கிவிடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
வேனை அவர் இருகூர் பாலம் அருகே ஓட்டிச் சென்றபோது, அவருக்கு எதிர்பாராதவிதமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அந்தத் தீவிரமான வலியிலும் சுதாரித்துக்கொண்ட அவர், குழந்தைகள் பயணித்த வேன் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில், சாதுரியமாக பாலத்தின் ஒரு பகுதியில் வேனை இடித்து நிறுத்தியுள்ளார். தன் இறுதி மூச்சு வரை போராடி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் சண்முகசுந்தரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதி மக்களைச் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
