CRIME
“இப்படியொரு கொடூர பின்னணியா..?!” 6 வருஷம் காத்திருந்த தந்தை.. 4 வயது சிறுவன் பலியான வழக்கில் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்… பஸ் நிறுத்தத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவர் விருதுநகரில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், மீண்டும் விருதுநகர் திரும்புவதற்காக விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இக்கொலைக்கு பின்னணியில் 6 ஆண்டுகள் நீடித்த பழிவாங்கும் உணர்ச்சி இருப்பது அம்பலமானது. கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆண்டனி பிரகாஷ் என்பவரின் மனைவியுடன் சொரிமுத்துவிற்கு ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவு காரணமாக, விடுதி ஒன்றில் வைத்து அவர்களின் 4 வயது சிறுவன் கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டான். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுப் பின் வெளியே வந்த சொரிமுத்து விருதுநகருக்குச் சென்று குடியேறிய நிலையில், ஆண்டனி பிரகாஷும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
தனது பிஞ்சு மகனின் மரணத்திற்குக் காரணமான சொரிமுத்து சொந்த ஊருக்கு வந்திருப்பதை அறிந்த தந்தை ஆண்டனி பிரகாஷ், 6 ஆண்டுகள் காத்திருந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இக்கொலை திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். மகனின் சாவுக்குப் பழிதீர்க்கப்பட்ட இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான ஆண்டனி பிரகாஷைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இதில் தொடர்புடைய எஞ்சிய 6 பேரைப் பிடிக்கத் தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
