CRIME
காதலிக்கு ‘கிஃப்ட்’ கொடுக்க ஓவர் தாராளம்… சொந்த வீட்டிலேயே ரூ.50 லட்சத்தைத் திருடி… அகமதாபாத்திற்குத் தப்பியோடிய அசாம் வாலிபர்..! மகனைத் தேடிக் கண்டுபிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தந்தை..!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்த 25 வயதான யாஷ் தனுக்கா அகர்வால் என்ற வாலிபர், தனது காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்காகத் தனது சொந்த வீட்டிலேயே ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளைத் திருடிய குற்றத்திற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தொழிலுக்காகப் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்தத் தொகையை யாஷ் திருடியுள்ளார். அவர் குடும்பத் தொழிலில் பங்கு வகித்ததால், பணம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதைச் சரியாக அறிந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
காதலிக்குச் செலவு செய்வதற்காகப் பணத்தைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்ற யாஷின் செல்போன் இருப்பிடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர், அவர் அகமதாபாத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவரது தந்தையே நேரடியாக அகமதாபாத் சென்று மகனை மீட்டு ஜோர்ஹாட்டுக்கு அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாஷ், நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவத்திற்குத் திட்டம் தீட்ட உதவி செய்ததோடு, திருடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய உதவியாக இருந்த யாஷின் நண்பர்களான ஜிதேந்திர சோமானி மற்றும் ரோஹித் பிரசாத் ஆகிய இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. யாஷின் காதலி மீது முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்கவும், திருடப்பட்ட ரொக்கம் மற்றும் நகைகளை மீட்டெடுக்கவும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
