CRIME
திடுக்கிடும் திருப்பம்..! கணவனுக்கு விஷம் கொடுத்துக் கொலை… மனைவியிடம் பணம் பறித்து கட்டாய மதமாற்ற முயற்சி…? ஆந்திராவை உலுக்கிய குடும்பத் தற்கொலை வழக்கில் மீரட்டில் வைத்து கைதான ரைபிள் பயிற்சியாளர்..!!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரைபிள் சூட்டிங் பயிற்சியாளரான ஷேக் சாதிக் கான் என்பவரை, மாணவர் ஒருவரின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டு மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் வைத்து ஆகஸ்ட் 22 அன்று பல மாநில காவல்துறையினரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு சாதிக் கான் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 16 அன்று ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் சௌஜன்யா, அவரது பெற்றோர்களான நூக்கராஜு மற்றும் மீனா, மற்றும் அவரது 10 வயது மகன் ஆகிய நால்வரும் குதித்தனர். இதில் 3 பெரியவர்களும் உயிரிழந்த நிலையில், சிறுவன் மட்டும் மீனவர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
ஆரம்பத்தில் இச்சம்பவத்தை ஒரு குடும்பத் தற்கொலையாகவே காவல் துறை விசாரித்து வந்தது. ஆனால், கைப்பற்றப்பட்ட இரண்டு தற்கொலை குறிப்புகளில் சாதிக் கானின் பெயர் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து வழக்கின் போக்கு மாறியது. ஜூலை மாதத்தில் உயிரிழந்த சௌஜன்யாவின் கணவர் கொவ்வூரி ஜெகதீஷ் ரெட்டியை சாதிக் கான் விஷம் வைத்துக் கொன்றதாக சௌஜன்யா தனது தற்கொலைக் குறிப்பில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கணவர் மறைவுக்குப் பிறகு சாதிக் கான் தம்மை மிரட்டித் துன்புறுத்தியதாகவும், பணம் மற்றும் நகைகளைக் கேட்டு மிரட்டி, குடும்பத்தின் சொத்து மற்றும் நிதி கணக்குகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாதிக் கான் தன்னை இஸ்லாமிய புத்தகங்களைப் படிக்க நிர்பந்தித்ததாகவும், மதமாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் சௌஜன்யாவின் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை தனி வழக்குப் பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சாதிக் கான் ஆந்திராவுக்குக் கொண்டு வரப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
