CRIME
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ..” மறுத்த பெண் ஊழியருக்கு மருந்தகத்திலேயே நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம் பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர் திடீரென அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இளம்பெண்ணை கத்தியால் குத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தோஷை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தோஷ் வற்புறுத்தியதாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
