CRIME
“உன்னைக் கடத்திட்டு போயி…” திருமணமான பகீர் மிரட்டல்.. பயத்தில் பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்…!!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுதிராகவன் என்பவர், பயிற்சி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும் மாணவியை தினமும் பின்தொடர்ந்து ஆபாசமாகப் பேசி, காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மாணவி எச்சரித்தும் கேட்காமல், தான் சொல்லும் இடத்திற்கு வரவில்லையெனில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, கடந்த ஜூலை 25ஆம் தேதி எலி பேஸ்ட்டைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.
உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சுதிராகவனின் தொடர் மிரட்டல் காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்ததாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த மாணவி ஜூலை 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய சுதிராகவன் மற்றும் அவரது தாய் ராதிகா மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளி கைது செய்யப்படாததால், ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் மூக்கனூர் பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மதிகோண்பாளையம் காவல்துறையினர், இரண்டு நாட்களுக்குள் குற்றவாளியைக் கைது செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பிளஸ் 1 கபடி வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
