LATEST NEWS
“அரசு நிர்வாகமே இது நியாயமா..?” சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அம்பேத்கர் சிலை அகற்றம்… கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்..!!!
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டத்தில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலை சமீபத்தில் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றிய மாபெரும் தலைவரான அம்பேத்கரின் சிலை அகற்றப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிலை அமைக்கப்பட்டதற்கு சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கினர். இதனால் சட்டம்-ஒழுங்கைப் பராமரித்து, அத்தகைய ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அந்த சமூக விரோதக் கும்பலுக்குப் பயந்து பணிந்துபோய், அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை அங்கிருந்து அகற்றிவிட்டதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் மிகச்சிறந்த சமூக அறிஞரான அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சாதி எல்லைக்குள் அடைக்கப் பார்ப்பது நாட்டுக்கே அவமானகரமான செயலாகும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட ஒரு சில சமூக விரோதிகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்த சமூகமும் மதிக்கும் தலைவர் என்பதால், அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலையை அரசு முறைப்படி நிறுவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
