CRIME
“அவன் வேணாம்மா.. எங்க கூட வந்துடு!”.. காதல் கணவனுடன் சென்ற மகள்.. நடுரோட்டில் காலில் விழுந்து கதறிய பெற்றோர்… கண்கலங்க வைக்கும் பின்னணி ..!!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளம்பெண்ணான ராஜபிரியா, வையாளிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டி இந்த இளம் ஜோடி சாணார்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த ராஜபிரியாவின் பெற்றோர் ராமச்சந்திரன் – செல்வி தம்பதியினர், தங்களது மகள் காதல் கணவனுடன் இருப்பதைப் பார்த்து, “படிக்க வைத்து ஆளாக்கிய எங்களுக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்துவிட்டாயே” எனக் கூறி காவல் நிலையத்திலேயே கதறி அழுதனர்.
பெற்றோர்கள் தங்களது மகளைச் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைக்க முயன்றும் ராஜபிரியா வர மறுத்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் காலைப் பிடித்து எங்களுடன் வந்துவிடு என்று கெஞ்சிக் கதறிய உருக்கமான சம்பவம் அங்கிருந்தோரைச் சோகத்தில் ஆழ்த்தியது. இருவருமே சட்டப்படி மேஜர் என்பதால், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், ராஜபிரியாவின் விருப்பத்தின் பேரில் அவரை அவரது காதல் கணவன் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தனர். பெற்ற வளர்ப்பை விடக் காதலே முக்கியம் என்று மகள் மறுத்துவிட்டதால், அவளது பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையத்திலிருந்து கண்ணீருடன் அழுதபடியே வீடு திரும்பிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
