CRIME
சினிமாவை மிஞ்சிய துப்பாக்கிச் சண்டை…”120 வினாடிகள்… 60 தோட்டாக்கள்!..” குருகிராமை உலுக்கிய நள்ளிரவு என்கவுண்டர்..! பின்னணியில் இருக்கும் பகீர் திட்டங்கள்..!!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக் என்ற உயர்தர குடியிருப்பு பகுதியில், போலீசாருக்கும் ஆயுதப்படை கும்பலுக்கும் இடையே நள்ளிரவில் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து செயல்பட்டு வரும் பிரபல குற்ற கும்பல் தலைவன் தீபக் நந்தால் என்பவனின் கூட்டாளிகள், அங்கிருந்த 36 வயது தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ.10 கோடி பறிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவலின் பேரில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வாகனத்தை மறித்தபோது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வெறும் 120 வினாடிகள் நீடித்த இந்த கடுமையான மோதலில் 60-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் முழங்கியுள்ளன. இந்த அதிரடி என்கவுண்டரில் ஆயுதக் கும்பலைச் சேர்ந்த 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சண்டையில் குற்றவாளிகளை எதிர்கொண்ட 3 போலீசாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பான நகர்ப்புற குடியிருப்பு பகுதியிலேயே தொழிலதிபர்களை குறிவைத்து, வாகன எண்களை மறைத்து பணயக்கைதியாக கடத்த திட்டமிட்ட இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இசைத்துறையில் இருந்து பின்னர் குற்ற உலகிற்கு மாறிய தீபக் நந்தாலின் இந்த வலையமைப்பை முழுமையாக ஒடுக்கவும், நகரின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் குருகிராம் முழுவதும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
