CRIME
“வயித்துல கட்டி தான்!”.. கள்ளக்காதலால் வந்த கர்ப்பம்… கணவனை ஏமாற்றி பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசிய கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத் தெரிவிக்காமல் குழந்தையுடன் வெளியேறியதால், சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. போலீசார் சுதாவின் வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது, குழந்தை மூச்சுத்திணறலால் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, உடலை முதலில் புதைத்ததாகவும் பின்னர் குப்பையில் வீசியதாகவும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் தீவிரமடைந்த போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சுதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
தான் கர்ப்பமாக இருந்ததை கணவரிடம் ‘வயிற்றில் கட்டி’ இருப்பதாகக் கூறி மறைத்த சுதா, குழந்தை பிறந்ததும் தனது கள்ளக்காதலன் யோகலிங்கத்துடன் இணைந்து அதைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தையைக் காணை பகுதியில் உள்ள ஏரி நீரில் அமுக்கிக் கொலை செய்து, கற்களைக் கட்டி உள்ளே வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏரியிலிருந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட சுதா மற்றும் யோகலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவினால் பெற்ற குழந்தையைத் தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஏரியில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
