CRIME
வேலியே பயிரை மேயலாமா..? QR கோட் வச்சு பிசினஸ்…! கேரளாவில் போதைப்பொருள் விற்று கைதான 3-வது ஆசிரியை..!!
கேரளாவில் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினரால் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் கீழ் இதுவரை 8,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோழிக்கோடு பேரம்பரா பகுதியில் உள்ள பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த 30 வயதான வி.பி. நீஷ்மா என்பவரை காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இதனுடன், இக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனா கே.சி மற்றும் கே. காவ்யா ஆகிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் செயற்கை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது காவல்துறைக்குத் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவ்வாசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் கடந்த சில மாதங்களில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும், அவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறையும் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்ததும், அவர்களும் சொந்தமாக செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகரா ஆய்வாளர் ஏ.வி. தினேஷ் கூறுகையில், போதைப்பொருட்களை விநியோகிக்கும் கும்பலில் இந்த ஆசிரியர்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகத் தெரிவித்தார். இவர்கள் சமூக ஊடகக் குழுக்கள் மூலம் கியூஆர் குறியீடுகளைப் பகிர்ந்து ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். மேலும், இவ்விற்பனைக்கு வளைகுடா நாட்டைச் சேர்ந்த கைபேசி எண் பயன்படுத்தப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் அடிக்கடி பெங்களூருக்குப் பயணம் செய்ததுடன் மங்களூரில் உள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டு, அதுகுறித்தும் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
