CRIME
“பகீர்..! 24 மணி நேரத்தில் 3 கொலைகள்… தலைநகர் டெல்லியை உலுக்கிய தொடர் குற்றங்கள்..!!”
இந்தியத் தலைநகர் டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் நடந்த மூன்று வெவ்வேறு கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வடமேற்கு டெல்லியின் கேசவ்புரம் பகுதியில், 20 வயது இளம் பெண் ஒருவர் கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள அறையில் நெற்றியில் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் 23 வயதான சௌரப் என்பவர், அதே கட்டிடத்தில் ‘கேர்டேக்கராக’ப் பணியாற்றி வந்தவர். அருகில் உள்ள ஜிம்மில் வேலை பார்த்து வந்த அந்தப் பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்று ஏற்பட்ட தகராறில், அவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இரண்டாவது சம்பவம் அசோக் விஹாரில் உள்ள ஒரு பூங்காவில் நடைபெற்றது. அங்கு அமர்ந்திருந்த 26 வயது பெண்ணிடம் சிலர் தவறாக நடக்க முயன்றபோது, அதைத் தட்டிக்கேட்ட சுனில் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்; காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாவது சம்பவம் நியூ உஸ்மான்பூர் பகுதியில் நடந்தது. அங்கு ஏற்பட்ட மோதலில் சிறுவன் ஒருவன் கத்தியால் பலமுறை குத்தப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவலறிந்த காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கேசவ்புரம் கொலையில் தப்பியோடிய சௌரப்பைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா சம்பவத்தில் ஒரு சிறுவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். ஒரே நாளில் நடந்த இந்த அடுத்தடுத்த கொலைகள் தலைநகரின் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
