CRIME
சொத்துக்காக இப்படியா..? பெற்ற தாயையும், தம்பியையும் கொன்று நாடகம்.. காட்டிக்கொடுத்த உடம்பில் இருந்த காயங்கள்… சென்னை அண்ணா நகர் பல் மருத்துவர் இரட்டை கொலையின் அதிர்ச்சி பின்னணி..!
சென்னை அண்ணா நகரில் சொத்து தகராறு காரணமாகப் பல் மருத்துவர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவர், உடன் பிறந்த சகோதரர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா என்ற பெண்ணின் இளைய மகனான பல் மருத்துவர் அஷ்ரப் அகமதுவுக்கும், அவரது அண்ணன்களான அஷ்ஷார் அகமது மற்றும் அப்ரார் அகமது ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்கு இடையே சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து தொடர்பாக மீண்டும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அண்ணன்கள் இருவரும் சேர்ந்து தங்களது தாய் அஷ்ரப் நிஷா மற்றும் தம்பி அஷ்ரப் அகமது ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கியதுடன், கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். அதன்பின்னர், காலையில் விடிந்ததும் இருவரும் வீட்டில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியுள்ளனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர்களின் உடலில் இருந்த காயங்கள் சகோதரர்களின் பொய்யைக் காட்டிக் கொடுத்தன. இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சொத்துக்காகத் தாயையும் தம்பியையும் கொன்றதை அண்ணன்கள் இருவரும் ஒப்புக்கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது இருவரின் உடல்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இந்த கொலையில் கைதானவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
