CRIME
“டேட்டிங் அப்பில் வந்த மெசேஜ்.. ரூமுக்கு கூப்பிட்ட பெண்கள்…” ஆசையாக ஹோட்டலுக்கு சென்ற அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்.. பரபரப்பு பின்னணி..!!
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த 53 வயது முன்னாள் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், ஆபாச டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்களை நம்பி ஆலந்தூரில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்ற இடத்தில், போதையில் மயங்கிய நள்ளிரவில் தனது 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் பணத்தைப் பறிகொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சன் லதா சிங் என்ற பெண்ணுடன் ஏற்பட்ட வாட்ஸ்அப் பழக்கத்தால், கடந்த ஆகஸ்ட் 26 அன்று விடுதிக்குச் சென்ற அவரிடம் அந்தப் பெண்ணும் மற்றொரு தோழியும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதிகாரி போதையில் தூங்கியவுடன் தங்களின் கைவரிசையைக் காட்டிவிட்டு நகையோடு தப்பியோடிய அப்பெண்களைப் பற்றிப் பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
உதவி கமிஷனர் பசுபதி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து சென்று முக்கியக் குற்றவாளியான கஞ்சன் லதா சிங்கை அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், இவர் டேட்டிங் செயலிகள் மூலம் வசதியான ஆண்களைத் தனிமையான இடங்களுக்கு வரவழைத்து, மதுவில் மயக்கித் திருடுவதை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வாடிக்கையாகக் கொண்டுள்ள பலே மோசடிப் பெண் என்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பெண் ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவின்படி தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; மேலும் அவருடன் தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணைத் தேடிப் போலீசார் தீவிர வலைவீசி வருகின்றனர்.
