LATEST NEWS
மின்வாரியக் கடனுக்குக் காரணம் யார்..? உழைக்கும் தொழிலாளர்களா..? K2 ஒப்பந்தக் கொள்ளையா.? வேல்முருகன் அதிரடி கேள்வி..!!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழக மின்வாரியம் பெரும் கடன் சுமையில் மூழ்கியிருப்பதற்குக் காரணம் உழைக்கும் தொழிலாளர்களா அல்லது இடைத்தரகர்களின் ‘K2 ஒப்பந்தக் கொள்ளையா’ என்று தமிழக அரசுக்குக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். உழைப்பவர்களின் வியர்வையில் இடைத்தரகர்கள் கொள்ளையடிக்கும் அவலநிலை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் தமிழக மின்வாரியத்தைப் பெருமளவிலான கடன் சுமைக்குள் தள்ளியதில் இந்த ‘K2 ஒப்பந்த முறை’ முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். தொழிலாளர்களின் கைகளை வலுப்படுத்தாமல் மின்வாரியத்தை ஒருபோதும் சீரமைக்க முடியாது என்றும், வாரியத்தின் நிதிப் பணம் தொழிலாளர்களுக்குச் சென்று சேர வேண்டுமே தவிர இடைத்தரகர்களின் கைகளில் குவியக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் முதலாவதாக இந்த K2 ஒப்பந்த முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்பட்டு, மின்வாரியத்தின் தேவையற்ற செலவுகள் குறைவதுடன், எதிர்காலத்தில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் மின்கட்டண உயர்வையும் கட்டுப்படுத்த முடியும் என்று வேல்முருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
