CINEMA
100 படங்களை எட்டிய ஜி.வி. பிரகாஷ்…என் குடும்பமே வாழக் காரணமே இவர்தான்…19 வருட திரையுலக பயணம்…ஜி.வி. பிரகாஷுக்குத் தங்கச் சங்கிலி… வேல்முருகனின் நெகிழ்ச்சியான வைரல் மொமெண்ட்…!
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாகத் திரையுலகினரால் கொண்டாடப்பட்டது. அவர் 100 திரைப்படங்களைத் தாண்டி இசையமைத்து வரும் வரலாற்றுச் சாதனையைப் பாராட்டும் விதமாக, அவரது இசையில் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி வரும் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் ஒரு நெகிழ்ச்சியான பரிசை வழங்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் மீதான தனது பேரன்பின் அடையாளமாக, ‘100 ஃபிலிம்ஸ் ஜி.வி சார்’ (100 Films GV Sir) என்ற முத்திரை பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான தங்கச் சங்கிலியை அவருக்கு அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது வேல்முருகனின் மகளும், பிரபல இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனும் உடனிருந்தனர்.
இன்று நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனித்துவமான அங்கீகாரம் பெற்று விளங்கும் வேல்முருகன், தனது திரைப்பயணத்தின் பிரம்மாண்ட திருப்புமுனைக்கு ஜி.வி. பிரகாஷே காரணம் என்று நெகிழ்ந்துள்ளார். தான் ஏற்கனவே சில படங்களில் பாடியிருந்தாலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் ‘ஆடுகளம்’ படத்தில் பாடிய ‘ஒத்த சொல்லால’ பாடல் தான் தனக்குப் மிகப்பெரிய வெளிச்சத்தையும் சர்வதேச அளவில் புகழையும் தேடித்தந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அன்று ஜி.வி. பிரகாஷ் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தால் தான், இன்று வரை 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடும் உயரத்தைத் தொட்டுள்ளதாக வேல்முருகன் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
இவர்களது கூட்டணியில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் ‘ஒத்த சொல்லால’, ‘சகுனி’யின் ‘போட்டது பத்தல’, ‘கொம்பன்’ படத்தின் ‘அடி கருப்பு நிறத்தழகி’, ‘அசுரன்’ படத்தின் ‘கத்தரிப் பூவழகி’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவை. ‘ஆடுகளம்’ தொடங்கி ‘யானை’, ‘வீர தீர சூரன்’, ‘ரெபல்’ மற்றும் ‘பராசக்தி’ வரை தொடர்ந்து 25 திரைப்படங்களில் தமக்கு பாடும் வாய்ப்பளித்து, தனது வாழ்விலும் குடும்பத்திலும் ஒளியேற்றிய உன்னத மனிதருக்குத் தனது நன்றியை வெளிப்படுத்தவே இந்தத் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்ததாக வேல்முருகன் உணர்ச்சிப் பெருக்கோடு தெரிவித்துள்ளார்.
