CINEMA
புதுப்பேட்டை ஷூட்டிங்கில் நேர்ந்த கொடூரம்…கேரவனுக்குள் சென்று கதறி அழுத சினேகா…சினிமாவுக்காக இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாரா சினேகா? நெஞ்சை உலுக்கும் ‘கிருஷ்ணவேணி’ கேரக்டர் உருக்கம்…!
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை பிளாக்பஸ்டர் படங்கள் வந்திருந்தாலும், தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான ‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றும் இணையவாசிகள் ‘புதுப்பேட்டை 2’ எப்போது வரும் என்று இயக்குநர் செல்வராகவனை நச்சரித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு, ரசிகர்களின் நெஞ்சில் இப்படம் நீங்கா இடம் பிடித்துள்ளது. ‘கொக்கி குமார்’ என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருந்த இந்தத் திரைப்படத்தில், ‘புன்னகை அரசி’ சினேகா தனது வழக்கமான குடும்பப் பாங்கான இமேஜை உடைத்து, ‘கிருஷ்ணவேணி’ என்ற விலைமாது கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்தாலும், சினேகாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான டாப் 5 படங்களை எடுத்தால் அதில் ‘புதுப்பேட்டை’ படத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ள சினேகா, அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த, நெஞ்சை உலுக்கிய ஒரு அதிர்ச்சி சம்பவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். படத்தில் ‘அன்பு’ என்ற தாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பாலசிங்கம், ஒரு காட்சியில் சினேகாவின் வயிற்றில் எட்டி உதைக்க வேண்டும். இயக்குநர் செல்வராகவன் அந்தக் காட்சி இன்னும் தத்ரூபமாக வர வேண்டும், எக்ஸ்பிரஷன் இன்னும் பயங்கரமாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்ததால், பதற்றத்தில் பாலசிங்கத்திற்கு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது. படம் மிக எதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக, அவர் சினேகாவின் வயிற்றில் நிஜமாகவே பயங்கரமாக எட்டி மிதித்துவிட்டார்.
அந்தக் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், வலி தாங்க முடியாமல் கதறியழுத சினேகா, யாரிடமும் சொல்லாமல் நேராகத் தனது கேரவனுக்குள் சென்று அழுதுள்ளார். இந்த விஷயம் கேள்விப்பட்டுப் பதறியடித்து ஓடிவந்த இயக்குநர் செல்வராகவன், “நிஜமாகவே உதைத்துவிட்டாரா? ரொம்ப வலிக்குதா? சாரி… ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று சினேகாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள சினேகா, “அன்று வலி தாங்காமல் அழுத அழுகைக்குத் தியேட்டரில் படம் பார்த்தபோது பெரிய பலன் கிடைத்தது; அந்த பிரம்மிப்பான காட்சிக்குக் கிடைத்த பாராட்டுகள் என் வலியை மறக்கடித்தன” என்று கூறியுள்ளார். ஹாலிவுட் தரத்திலான ‘சூப்பர் 35’ கேமரா ஃபார்மட் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அசாத்திய பின்னணி இசை ஆகியவை இப்படத்தின் முதுகெலும்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
