CINEMA
“காலம் முடிவு செய்தால்” அரசியலுக்குள் நுழையும் நடிகர் சூர்யா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
நடிகர் சூர்யாவுக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் இல்லை என்று அவரது அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற நற்பணி மன்றத்தின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்ற திரு.இரா. வீரமணி என்பவர், ‘காலம் முடிவு செய்தால் சூர்யா அரசியலில் நுழைவார்’ என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், ரசிகர் மன்றத் தலைமை தற்போது இந்த விளக்க அறிக்கையையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சிறப்புப் பேச்சாளர் வீரமணி பேசியது அவரது தனிப்பட்ட கருத்தே தவிர, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்றும், சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எள்ளளவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலம் மக்களுக்குச் செய்யும் சமூகச் சேவைகளே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருவதால், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நற்பணி இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
