CINEMA
“எங்கள் பிரிவைப் பற்றி யாரும் தப்பாகப் பேச வேண்டாம்… இது நாங்கள் இருவரும் யோசித்து எடுத்த முடிவு..!” விவாகரத்தை உறுதி செய்து ரசிகர்கள் முன் பாட்ஷா வைத்த உருக்கமான வேண்டுகோள்..!!
பிரபல ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான பாட்ஷா மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை-மாடல் இஷா ரிகியும் திருமணமாகி சில மாதங்களிலேயே பிரிந்து விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், திங்கள்கிழமை இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கூட்டு அறிக்கையின் மூலம் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டதல்ல என்றும், பரஸ்பர சம்மதம் மற்றும் மரியாதையுடனேயே எடுக்கப்பட்டது என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். “நானும் இஷா ரிகியும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்லவும், வாழ்க்கையில் முன்னோக்கி நகரவும் முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான காலத்தில் எங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், எங்களது உறவு குறித்து தவறான தகவல்களையோ அல்லது ஊகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவே எங்களின் ஒரே மற்றும் கடைசி அறிக்கையாகும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்திருந்தாலும், இவர்களது உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இஷா ரிகி பதிவிட்டிருந்த சோஷியல் மீடியா பதிவில், “உடலில் எந்த காயத்தையும் ஏற்படுத்தாத சில போராட்டங்கள் உள்ளன. என் கணவரிடம் அதிக செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால், பயம் காரணமாகவே நீண்ட காலம் அமைதியாக இருந்தேன். ஆனால் என் அமைதி சம்மதம் அல்ல, அது உயிர்வாழ்வதற்கான முயற்சி மட்டுமே. இன்று பயத்திற்கு பதிலாக தைரியத்தை தேர்ந்தெடுக்கிறேன்” என்று எழுதியிருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இஷா ரிகியின் தாய் இவர்களது திருமண புகைப்படங்களை பகிர்ந்து திருமணத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த திருமணம் ஒரே ஆண்டில், அதாவது வெறும் 5 மாதங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது.
