CINEMA
“நான் உங்க கூட நிற்பேன்!”.. விஷால் கொடுத்த அந்த ஷாக் ஸ்பீச்.. திடீரென கிளம்பிய அரசியல் பரபரப்பு..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ள சில உருக்கமான வார்த்தைகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. ரசிகர்களின் நற்பணிகளை எப்போதுமே ஊக்கப்படுத்தும் வழக்கம் கொண்ட அவர், இந்தச் சந்திப்பின்போது, “என்னிடத்திலும் சில தவறுகள் இருக்கின்றன; அவற்றை நான் சரிசெய்து கொள்ள வேண்டும். ஒரு நடிகராக இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்த நான், இந்த வயதிலும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல், நல்ல உணர்ச்சியோடு கூறுகிறேன். இனிமேல் நாம் போகக்கூடிய பாதை சாதாரண பாதை கிடையாது, அது நேர் பாதை. குறுக்குப் பாதை கிடையாது. நாம் நேர் பாதையில் செயல்படும் போது, உங்களுக்கு நான் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன்” என்று பேசியுள்ளார். அவரது இந்தத் திடீர் பேச்சு, அவரது எதிர்கால அரசியல் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்ததாகவே இருக்கும் என்று இணையவாசிகள் பலரும் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஷால் ஒரு காலத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் எனத் தொடர்ந்து பல தேர்தல்களில் போட்டியிட்டு வந்ததால், இவருக்கு அரசியலில் அதிக ஆர்வமும் ஆசையும் இருப்பதை நெட்டிசன்கள் முன்னரே வெளிச்சம் போட்டுக் காட்டினர். தேர்தல் போட்டிகள் மட்டுமின்றி, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததை ஒப்பிட்டு, விஷாலும் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சைக்கிளில் வந்த ‘பப்ளிக் ஸ்டண்ட்’ வீடியோக்களை நெட்டிசன்கள் கிண்டலடித்த நிகழ்வுகளும் உண்டு. தற்போது தனது ‘மகுடம்’ திரைப்படத்தின் ரிலீஸ் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஷாலின் இந்த புதிய பேச்சு, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
