CINEMA
“என்னை இங்கேயே கொன்னுடுங்க..!” இன்ஸ்டாவில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் போட்ட ஜி.பி.முத்து..! பின்னணியில் உள்ள உண்மை என்ன..?!
யூடியூப் தளத்தில் பிரபலமான நடிகரான ஜி.பி.முத்துவுக்கும், அவரது சொந்த ஊரான பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட நாட்களாகத் தொடர்கிறது. அங்குள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளை ஊர்மக்கள் செய்து வரும் சூழலில், ஜி.பி.முத்து அக்கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பதாக தவறான தகவல்களைப் பரப்புவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சாதாரணமாக நடக்கும் வழிபாட்டு முறைகளை ‘மாந்திரீக பூஜை’ எனக் கூறி சித்தரிப்பதாகவும், தட்டிக் கேட்பவர்களை ஆட்களை வைத்துக் தாக்கிவிட்டு தன் மீதே புகார் அளிப்பதாகவும், ஊர்ப் பெண்களை அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடுவதாகவும் கூறி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஜி.பி.முத்து மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஊர்மக்களின் இந்தத் தொடர் புகார்களால் காவல்துறையினர் அவரை அடிக்கடி விசாரணைக்கு அழைத்து வருவதாகத் தெரிகிறது. இந்த தொடர் விசாரணைகளால் மன உளைச்சலுக்கு ஆளான ஜி.பி.முத்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “காவல்துறையின் தொடர் விசாரணையால் என் குழந்தைகள் பயந்து அழுது துடிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை; என்னை இங்கேயே கொன்று விடுங்கள்” எனக் கதறி அழுது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜி.பி.முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். இதைப் பார்த்த அவரது ரசிகர்களும் பின் தொடர்பவர்களும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். இருப்பினும், அந்தப் பதிவை அவர் எதற்காக வெளியிட்டார், அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
