CRIME
“அத்தையும், மாமாவும் ரொம்ப கெட்டவங்க” 10 வயது அனாதை சிறுமியின் குமுறல்.. 2 வருடமாக வீட்டிற்குள் நடந்த கொடூரம்.. அத்தையின் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கூறி 2 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சொந்த அத்தையின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் பாட்டி ஏற்கனவே உயிரிழந்ததால், அவளது அத்தையும் அத்தையின் கணவரும் அச்சிறுமியைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஆனால், பாதுகாப்பளிக்க வேண்டிய நபரே சிறுமியின் நம்பிக்கையை உடைத்துக் கொடூரமான முறையில் நடந்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த சமயத்தில், அத்தை வேலைக்குச் சென்ற வேளையில் சிறுமியை மிரட்டி அத்தையின் கணவர் முதல்முறையாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அச்சத்தில் சிறுமி நீண்ட காலம் மௌனமாக இருந்துள்ளார். இதனைப் சாதகமாக்கிக் கொண்டு சுமார் 2 ஆண்டுகளாக அவர் சிறுமிக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தோழி மற்றும் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவரின் உதவியுடன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த போபால் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 3 முறை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்விற்காக ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. உறவுகளைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்ட நபருக்கு வழங்கப்பட்ட இந்த அதிரடித் தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
