LATEST NEWS
அதிமுக டூ தவெக: 6 எம்.எல்.ஏக்கள் திடீர் எஸ்கேப்.. எடப்பாடியின் மௌனத்தின் ரகசியம்.. கிழித்து தொங்கவிட்ட திருமாவளவன்…!!
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் ஓயாத பரபரப்பில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 முக்கிய எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக மற்றும் தவெக முகாம்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சியான திமுக “குதிரை பேரம்” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மௌனம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதிமுகவினரை தவெகவில் இணைப்பது தொடர்பாக அமைச்சர்கள் பேசிய பேச்சுக்குக் கூட எடப்பாடி பழனிசாமி எந்தவொரு கருத்தும் சொல்லாமல் அமைதி காப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய திருமாவளவன், “அதிமுகவிலிருந்து ஆட்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் நிலையில், அக்கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி ஏன் அதிமுக தலைவர்கள் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்? ஆவேசப்பட்டு தவெகவுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள், அமைதி காப்பதன் பொருள் என்ன?” என்று சாடியுள்ளார். தங்களின் கட்சியை அபகரிக்கப் பார்க்கிறார்கள் என்று அதிமுகவினர் பொதுமக்கள் மத்தியில் முறையிடாமல், வெறும் ஆளுநரிடம் மனு கொடுப்பதோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள் என்றும், குதிரை பேரம் புகார் உண்மையாக இருந்தால் ஆளுநர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
