CRIME
சிதம்பரத்தில் பரபரப்பு…! 5 வயது சிறுமியின் உடலில் கீறல்கள்… சிசிடிவி காட்சிகளுடன் களமிறங்கிய சிங்கப்பெண் படை..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், UKG படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோர் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் தாயார் அளித்த புகாரில், தனது மகளின் பிறப்புறுப்பு பகுதியில் கீறல்கள் இருந்ததாகவும், இதனால் பள்ளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த புகாரில் குறிப்பிட்ட நபர் யாரையும் அவர்கள் குற்றஞ்சாட்டவில்லை.
இந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவொரு ஆதாரமும் கிடைக்காததால், விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி பள்ளி முதல்வரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது, அந்தப் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறுமியிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 5 வயது சிறுமி தொடர்பான இந்த விவகாரம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
