CRIME
“நான் MBA படிச்சிருக்கேன்… USA-ல இருக்கேன்… Snapchat Friend-ஐ நம்பி வீட்டிற்குள் அனுமதித்த..! ஆசிரியைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!”
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பணியாற்றி வந்த 25 வயது ஆசிரியைக்கு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Snapchat மூலம் ஒரு நபர் அறிமுகமானார். தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், MBA படித்திருப்பதாகவும் கூறி அந்த நபர் ஆசிரியைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இரண்டு ஆண்டுகள் ஆன்லைனில் உரையாடிய பிறகு, புனேவுக்கு வந்து நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறியதால், அந்த ஆசிரியை அவரைத் தனது வீட்டிற்கு வர அனுமதித்துள்ளார்.
சம்பவம் நடந்த நாளன்று, இருவரும் சிறிது நேரம் பேசிய பிறகு ஆசிரியை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு உணவு கொடுக்க சில நிமிடங்கள் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தபோது, வீட்டிற்கு வந்த நபர் காணாமல் போனதுடன், அலமாரியில் இருந்த சுமார் ரூ.14.39 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் பணமும் மாயமாகி இருந்தன. ஆசிரியை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சிக்னல்களைக் கொண்டு குஜராத்தின் வதோதரா பகுதியில் அந்த நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 160 கிராம் தங்க நகைகளும், 17 SIM கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், MBA முடித்த அந்த நபர் வெளிநாடுகளான கென்யா மற்றும் கானாவில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், சமூக ஊடகங்கள் மூலம் பெண்களிடம் பழகி நம்பிக்கையைப் பெற்று மோசடி செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் அறிமுகமாகும் நபர்களைப் பற்றிய விவரங்கள் போலியாக இருக்கலாம் என்பதால், முதல் சந்திப்பில் வீட்டிற்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
