LATEST NEWS
மீண்டும் வருகிறதா லாக்டவுன்?.. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு… மத்திய அரசு அவசர உத்தரவு…!
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவசர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து உடனடியாக மருத்துவ மாதிரிகளை சேகரித்து விரைவாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் முழுமையான விவரங்களை ஒருங்கிணைந்த அரசு இணையதளத்தில் எவ்வித தாமதமுமின்றி உடனுக்குடன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை தயார்படுத்துவதோடு, தொற்றின் தன்மையை அறிய மரபணு பரிசோதனைக்காக மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
