LATEST NEWS
காலையிலேயே ஷாக்.! ரூ.50 கோடி நஷ்டஈடு… 48 மணி நேரக் கெடு.. தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிக்கு அன்பில் மகேஷ் அதிரடி நோட்டீஸ்..!!
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதிலும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டதை அடுத்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரான நந்தகுமாருக்கு எதிராக, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாயிலாக அன்பில் மகேஷ் இந்த அவதூறு நோட்டீஸை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்காக நந்தகுமார் அடுத்த 48 மணிநேரத்திற்குள் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமக்கு ஏற்பட்ட அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் சிவில் மற்றும் கிரிமினல் ரீதியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அங்கீகாரப் புதுப்பித்தல் ஊழல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றின் தலைவரான அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுப்பியுள்ள இந்த 48 மணி நேரக் கெடு நோட்டீஸ் தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
