LATEST NEWS
நாடே பேரதிர்ச்சி..! கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிவு… இந்திய அணுசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா.?
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தின் சர்வரில் இருந்து சுமார் 19,000 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வேர்ல்டு லீக்ஸ்’ என்ற ரேன்சம்வேர் ஹேக்கர் குழு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான, ‘யோட்டா’ மூன்றாவது தரப்பு தரவு மையத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்த சர்வரை ஹேக் செய்து, 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த கோப்புகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது. இந்தத் தரவுகளில் கட்டுமானத்தில் உள்ள 3 மற்றும் 4 ஆகிய அலகுகளின் வெண்டிலேஷன், கூலிங் சிஸ்டம் மற்றும் கட்டுப்பாட்டு அறையின் தரைத்தள வடிவமைப்பு உள்ளிட்ட பொறியியல் வரைபடங்களும், உதிரிபாகங்கள் விநியோகிப்பாளர் விவரங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தரவுக் கசிவு குறித்து தேசிய அணுசக்தி கழகம் விளக்கம் அளித்துள்ளது. கசிந்ததாகக் கூறப்படும் கோப்புகள் அணு உலைகளின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் (Core systems) அல்லது அணுசக்தி பாதுகாப்பு தொடர்பானவை அல்ல என்றும், அவை வழக்கமான கட்டுமான உள்கட்டமைப்பு சார்ந்த பொதுவான கோப்புகள் மட்டுமே என்றும், இதனால் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், தென்னிந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்பின் தரவுகள் கசிந்திருப்பது பாதுகாப்பு ரீதியாகக் கவலை அளிப்பதாகச் சமூக ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் சுட்டிக்காட்டி, மத்திய-மாநில அரசுகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்
