CRIME
பெற்றோர்களே கொஞ்சம் உஷாரா இருங்க… இன்ஸ்டாகிராம் மோகத்தால் நேர்ந்த விபரீதம்…! 10-ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கடத்திய வாலிபர்… 3 மாதங்களுக்குப் பின் ஹரியானாவில் வைத்து தூக்கிய காவல்துறை..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் பட்டாபிபுரத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் தளம் வழியாக பாபட்லா மாவட்டம் பரச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜான் சைதா என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் அதிகரிக்க, சிறுமியை ஏமாற்றி நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திய குற்றம் சாட்டப்பட்ட ஜான் சைதா, வீட்டில் யாருக்கும் தெரியாமல் பணம் மற்றும் தங்க நகைகளுடன் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். சிறுமி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து பட்டாபிபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
காவல்துறையின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து தனது மொபைல் எண்கள் மற்றும் சிம் கார்டுகளை மாற்றி வந்ததோடு, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளையும் தவிர்த்து வந்துள்ளார். குண்டூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் நெல்லூர் சென்ற இவர்கள், அங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். 3 மாதங்களாகத் தன் மகளைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு மனு’ தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையின் தாமதமான நடவடிக்கை குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி அவளது தாயாரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, காவல்துறை தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்து ஐபி முகவரியை வைத்து அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தது. ஹரியானா மாநிலம் கர்னால் நகரில் அவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அங்கு சென்ற சிறப்புப் படைப் பிரிவு உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் ஜான் சைதாவைக் கைது செய்தது. அதன்பின் சிறுமியும் குற்றம் சாட்டப்பட்டவரும் விமானம் மூலம் குண்டூருக்கு அழைத்து வரப்பட்டு, சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட பின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
