CRIME
நீதான் என் அம்மாவைக் கொன்ன… 84 வயது பாட்டியை சூனியக்காரி எனக் கூறி அடித்தே கொன்ற கும்பல்… கண்ணீரில் கதறி துடிக்கும் மகள்..! மூடநம்பிக்கையால் ஜார்க்கண்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் துணைத் தலைநகரான தும்கா மாவட்டத்தில் உள்ள தால்ஜாரி காவல் எல்லைக்குட்பட்ட நேமாரிபாதர் கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முதிய பெண் நோயால் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த 84 வயதான டேங்கி ஹான்ஸ்தா என்ற முதியவர் தான் காரணம் என்றும், அவர்தான் பில்லி சூனியம் மற்றும் செய்வினை செய்து அவரைக் கொன்றார் என்றும் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டனர். இந்த மூடநம்பிக்கை காரணமாக, 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் திரண்டு சென்று முதியவர் டேங்கி ஹான்ஸ்தாவை கொடூரமாக அடித்துக் கொன்றது.
இக்கொடூர சம்பவம் குறித்து கொல்லப்பட்ட முதியவரின் மகள் சூரஜ்முனி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், சம்பவத்தன்று அவரும் அவரது தாயாரும் வீட்டில் அமர்ந்திருந்தபோது, கிராமத்தைச் சேர்ந்த சிதாமுனி ஹான்ஸ்தா, மகோதி கிஸ்கு ஆகிய பெண்கள் சிலருடன் தங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “நீதான் என் தாயாரை பில்லி சூனியம் செய்து கொன்றாய்” எனக் கூறி, டேங்கி ஹான்ஸ்தாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே காத்திருந்த கும்பல், அந்த முதியவரை சூனியக்காரி எனக் கூறி தடிகளாலும் கம்பிகளாலும் கொடூரமாக அடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தால்ஜாரி காவல் நிலைய போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, இக்கொலையில் தொடர்புடைய 6 பெண்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மகோதி கிஸ்கு, ரனியா ஹான்ஸ்தா, சிதாமுனி ஹான்ஸ்தா, சாந்தி முர்மு, புல்முனி சோரன் மற்றும் லோகாய் ஹான்ஸ்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிறுமியைப் பொலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 ஆண்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட தடிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
