LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! காரில் CNG நிரப்பியபோது திடீரென வெடித்துச் சிதறிய குழாய்… மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த ஊழியர்..! பெட்ரோல் பங்கில் நடந்த பகீர் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள சாக்கச்சி-காளிமாட்டி சாலையில் அமைந்துள்ள ‘பாரத் பெட்ரோலியம்’ பெட்ரோல் பங்கில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பணிக்காக வந்த 24 வயதான துஷார் காம்ரி என்ற ஊழியர், காரில் சி.என்.ஜி எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிக வாயு அழுத்தம் காரணமாக எதிர்பாராதவிதமாக சி.என்.ஜி குழாய் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
குழாய் வெடித்த வேகத்தில், அதன் கனமான முனை துஷாரின் தலையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, சக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக டாடா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த விபத்து ஏற்பட்டதும், பெரும் வெடிப்பு மற்றும் எரிவாயு கசிவு ஏற்படும் என்ற அச்சத்தில் அங்கு நின்றிருந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு அலறியடித்து ஓடினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எரிவாயுக் கசிவை ‘கெயில்’ நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து கோல்முரி பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பெட்ரோலிய பாதுகாப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விபத்து நடந்த சி.என்.ஜி பங்க் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
