CRIME
எனக்கு வலிக்குது மருந்து வாங்கிட்டு வாங்க… துடித்த மனைவி..! கடை மூடியதால் வெறும் கையோடு வந்த கணவன்… பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..! நாக்பூரில் அரங்கேறிய கொடூரம்..!!
மகாராஷ்டிராவின் நாக்பூரில், குடியிருப்பு சங்கத்தில் நடக்கும் நடன வகுப்பிற்குச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 38 வயதான யாமினி என்ற பெண் தன் கணவர் கிருஷ்ண லால் யாதவால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய கிருஷ்ண லால் உணவு சமைத்துத் தருமாறு கேட்டபோது, நடன வகுப்பிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த யாமினி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், மதுபோதையில் தனது இரண்டு பிள்ளைகளின் கண்முன்னே மனைவியின் கழுத்து மற்றும் வயிற்றில் பலமாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குப் பின் கடுமையான வலியால் துடித்த யாமினி, கணவரிடம் வலி நிவாரணி கேட்டுள்ளார். ஆனால் மருந்துக் கடை மூடப்பட்டிருந்ததால் மருந்து கிடைக்கவில்லை. உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வயிறு வீங்கியதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் இதனை விபத்து மரணம் எனப் பதிவு செய்த காவல்துறை, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்பே உண்மையைக் கண்டறிந்தது.
பிரேதப் பரிசோதனையில் யாமினியின் கழுத்து எலும்பு முறிந்திருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும், குடலில் கடுமையான உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதும் உறுதியானது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அளித்த தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கை கொலை வழக்காக (பிரிவு 302) மாற்றி, கணவர் கிருஷ்ண லால் யாதவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
