CINEMA
விஜய் மேடைகளில் பேசுவது இல்லையா?…பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…எச்.ஏ.சி கொடுத்த ‘நறுக்’ பதில்…முதல்வரான பின் வந்த முதல் பிறந்தநாள்…52-ஆவது வயதில் தவெக தலைவர் விஜய்…தமிழகமே விழாக்காலம்..!
தமிழக முதல்வராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராகவும் பொறுப்புவகிக்கும் விஜய், இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால், மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் இதனை விழாக் கோலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்தன் ஏற்பாட்டில், மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோவிலில் சிறப்புப் பாலாபிஷேகமும், விசேஷ மகா பூஜைகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தன் மகன் நாட்டின் முதல்வராக உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதை விட ஒரு தந்தைக்கு வேறென்ன பெரிய மகிழ்ச்சி வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “விஜய் அரசியல் மேடைகளில் அதிகமாகப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குத் தமக்கே உரிய பாணியில் அதிரடியாகப் பதிலளித்த எஸ்.ஏ.சி, “கடந்த 60 வருடங்களாக இந்த நாட்டில் பேசிப் பேசியே நாட்டை கெடுத்தார்கள்; இவரும் அதையே செய்ய வேண்டுமா? உங்களுக்குப் பேசுவது முக்கியமா அல்லது மக்களின் தேவையைச் செயல்படுத்துவது முக்கியமா?” என்று திருப்பிக் கேட்டார். மேலும், ‘இதைச் செய்வோம், அதைச் செய்வோம்’ என்று வெற்று வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவதை விட, வாயைத் திறந்து பேசாமல் தன்னுடைய செயலின் மூலம் மட்டுமே விஜய் நிருபித்துக் காட்டி வருவதால், அவர் வீணாகப் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ்நாட்டில் இதுவரை இருந்த பிற அரசியல் கட்சிகள் எல்லாமே சேவை செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் யாருக்காவது அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுத்தார்களா என்று கேள்வி எழுப்பினார். ஆனால் விஜய், ஆட்சிக்கு வந்தவுடனேயே எல்லோரையும் அரவணைத்து, அதிகாரப் பகிர்வுடன் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதாகக் குறிப்பிட்டார். அந்த அதிகாரம் தன் கையில் இருந்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து, அதற்கான வாய்ப்பை விஜய் மிகச் சரியாகப் பயன்படுத்தி வருவதாகவும் எஸ்.ஏ.சி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
