CINEMA
2 நாளில் இத்தனை கோடியா…! ‘கருப்பு’ வசூல் வேட்டையை பார்த்து மிரண்டு போன கோலிவுட்…!பாக்ஸ் ஆபிஸை அலறவிடும் சூர்யா…!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், பல மாத காத்திருப்புக்குப் பிறகு கடந்த மே 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்கொண்ட நிதி நெருக்கடியை தீர்க்க, நடிகர் சூர்யா தன் சொந்தப் பொறுப்பில் 30 கோடி ரூபாய் கடனை ஏற்றுக் கொண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவினார். நீண்ட நாட்களாக ஒரு முறையான கமர்ஷியல் ஹிட்டிற்காக ஏங்கிக் கொண்டிருந்த சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு, இப்படம் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்து , தியேட்டர்களில் குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட்டாக மாறியுள்ளது.
இப்படத்தில் வழக்கறிஞராகவும், மாஸ் கமர்ஷியல் ஹீரோவாகவும் சூர்யா தனது அசாத்திய பாடி லாங்குவேஜ் மற்றும் மிடுக்கான நடிப்பால் மிரட்டியுள்ளார். இவருடன் திரிஷா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து, பின்னர் அவருக்குப் பதிலாக உள்ளே வந்த சாய் அபயங்கர், பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிரட்டி ஒட்டுமொத்த சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். படம் சில இடங்களில் ‘காந்தாரா’ பாணியை நினைவுபடுத்தினாலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான நேர்மறையான விமர்சனங்களுடன் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
மக்களின் இந்த வரவேற்பு படத்திற்கான வசூலிலும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. சாக்னில்க் (Sacnilk) இணையதளத் தகவலின்படி, ‘கருப்பு’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 16.66 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்திற்குப் பரவிய பாசிட்டிவ் டாக் காரணமாக, இரண்டாவது நாளான நேற்று வசூல் இன்னும் எகிறி, 23.40 கோடி ரூபாயை அள்ளியுள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்களில் இந்திய வசூல் மட்டுமே 40 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைத் தாண்டி உலகளாவிய சந்தையிலும் இப்படம் தடம் பதித்து வருகிறது. உலக அளவில் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், ஒட்டுமொத்தமாக இரண்டே நாட்களில் 66 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதால், இப்படம் மிக விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் அதிகாரப்பூர்வமாக இணையும் என்று சினிமா வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.
