CINEMA
“நான் திரையில்தான் நடிகன், நிஜத்தில் இல்லை!” – ஆர்த்தி தரப்புக்கு ரவி மோகன் விடுத்த அதிரடி சவால்…!
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன் தனது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை எந்தவொரு சூழ்நிலையிலும் சிரித்த முகத்துடன், அமைதியாகப் பிரச்சினைகளைக் கையாளுபவராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது செய்தியாளர்கள் முன்னிலையில் உடைந்து பேசியிருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாடகி கெனிஷா தன்னை விட்டு விலகிச் சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த மறுநாளே ரவி மோகன் இந்த ஊடகச் சந்திப்பை நடத்தியுள்ளதால், இதுவே அவரது மன உடைப்பிற்கான முக்கிய காரணமாக இருக்குமோ என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் தனது திருமண வாழ்க்கையில் தனிமனித சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டதை விவரித்த ரவி மோகன், “எனக்கென்று ஒரு தனி வாழ்க்கையோ, தனிப்பட்ட வங்கி கணக்கோ (Bank Account) கூட இல்லை; இருந்த ஒரே ஒரு கூட்டு கணக்கில் (Joint Account) நான் ஒரு சிறிய பொருள் வாங்கினால் கூட, அது குறித்து வீட்டில் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு என் நிம்மதி கெடுக்கப்பட்டது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்த 14 ஆண்டுகால நரக வாழ்க்கையைத் தாங்க முடியாமல் தான் அங்கிருந்து வெளியேறி ஓடி வந்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் தன்னை ஒரு மனிதனாகப் புரிந்து கொண்டு துணையாக நின்றவர் கெனிஷா மட்டும்தான் என்றும் உருக்கமாகக் கூறினார். ஆனால், தற்போது சோஷியல் மீடியா புல்லிங் (Social Media Bullying) மூலம் அவரையும் இங்கிருந்து அனுப்பிவிட்டார்கள் என்று மனவேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் இத்தனை காலம் அமைதியாக இருந்ததை அனைவரும் பலவீனமாக எடுத்துக் கொண்டு, தன்னை வைத்துப் பகடை ஆட்டம் ஆடியதாகக் குற்றம் சாட்டினார். இந்த இக்கட்டான சூழலில் தமக்கு உறுதுணையாக நின்ற தனது உண்மையான நண்பர்களைப் பற்றிக் குறிப்பிட்ட ரவி மோகன், நடிகர் கார்த்தியின் பெயரை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். “கஷ்ட காலத்தில் கூட இருப்பவன்தான் உண்மையான நண்பன். கார்த்தி என் அருகில் நின்று, ‘நீ ரொம்ப நல்லவன்டா’ என்று எனக்குத் தைரியம் கூறினான். நம்மோடு வாழ்பவர்களுக்குத்தான் நாம் யார் என்பது உண்மையில் தெரியும்” என்று நெகிழ்ந்து பேசினார். மேலும், கோடிக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க வைக்கும் தனது சொந்தக் குழந்தைகளைத் தன்னைச் சந்திக்க விடாமலும், தொலைபேசியில் கூடப் பேச விடாமலும் தடுத்து வைத்துள்ளதே தனது ஆகப்பெரும் மன உளைச்சலுக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழலில் மனரீதியாகத் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால், தனது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வரும் வரை புதிய படங்கள் எதிலும் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை ரவி மோகன் அறிவித்துள்ளார். “நான் திரையில் மட்டுமே நடிகன், நிஜ வாழ்க்கையில் என்னால் நடிக்க முடியாது” என்று குறிப்பிட்ட அவர், தன் வாழ்க்கையை அழிக்க நினைத்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை இந்த உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும் என்றும் எச்சரித்துள்ளார். ரவி மோகனின் இந்த எமோஷனலான பேட்டிகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் இந்த விவகாரத்தில் ஆர்த்தி ரவி தரப்பிலிருந்து என்ன மாதிரியான மறுப்புகளோ அல்லது விளக்கங்களோ வரப்போகின்றன என்பதை அறிய ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
