CINEMA
“தப்பு பண்றது ஆண்கள் மட்டும் இல்ல…!”23 வருஷ உழைப்பு.. ஆனா ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இல்ல…! சட்டத்த துஷ்பிரயோகம் பண்றாங்க…! ரவி மோகனுக்காக கொதித்த மீரா சோப்ரா…!”
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கும் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி, தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் குறித்து கண்ணீர் மல்கப் பேசியது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்ததாகக் குறிப்பிட்ட அவர், “எனக்கென்று தனியாக ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை, நான் எடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்” எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தனது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், 23 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தன் மீது எந்தக் குறையும் இல்லை என்றும், தற்போது மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் கதைகள் முற்றிலும் பொய்யானவை என்றும் மறுத்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவாகவும், உண்மையாகப் புரிந்து கொண்ட ஒரே பெண் கெனிஷா மட்டுமே என்றும், ஆனால் அவரையும் சைபர் புல்லிங் செய்து துரத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். தன் சொந்தக் குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் பள்ளிக்குச் சென்றும் ஏமாற்றமடைந்த மன உளைச்சலில், தான் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்குக் கூட முயன்றதாக ரவி மோகன் மிக உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட ‘மூன்று எழுத்து நடிகை’ தான் தனது குடும்பப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்றும், தங்களைப் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் ஜெயம் ரவி உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருந்தார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், வட இந்திய மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மீரா சோப்ரா, ஜெயம் ரவிக்கு ஆதரவாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
மீரா சோப்ரா தனது பதிவில், “ரவி மோகனை எனக்குத் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய காலத்திலிருந்தே நன்றாகத் தெரியும். அவர் மிகவும் எளிமையான, இனிமையான மனிதர். எல்லா நேரங்களிலும் ஆண்கள் மட்டுமே தவறு செய்பவர்களாக இருப்பதில்லை. பெண்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். எனவே, இந்த விஷயத்தில் ஒரு ஆணின் குரலும் கேட்கப்பட வேண்டும்” என்று ஜெயம் ரவியின் நிலைக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
