CINEMA
217 பேருடன் தியேட்டரை அதிரவைத்த குடும்பம்…!எல்லைச்சாமி கருப்பசாமி கனவுல வந்து சொன்னார்…!”சூர்யாவுக்கு கிடைத்த அசாத்திய வெற்றி…!ஆர்.ஜே.பாலாஜிக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பம்…!”
சூர்யா, த்ரிஷா, நட்ராஜ் மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘கருப்பு’. இப்படத்தை பிரபல இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியது மட்டுமன்றி, அவரே வில்லனாகவும் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கரின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், நடிகர் சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து சாதனை படைத்து வருகிறது.
வசூலில் மாஸ் காட்டி வரும் இத்திரைப்படம், வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் 147 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படம் வெளியாகி மே 19ஆம் தேதியுடன் ஐந்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் இதன் வசூல் வேட்டை தொடர்ந்து 160 முதல் 175 கோடி ரூபாய் வரை எட்டியிருக்கக் கூடும் என்று சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளன. தியேட்டர்கள் அனைத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தங்கம் டாக்கீஸ் திரையரங்கில், நபர் ஒருவருக்கு ‘கருப்பு’ திரைப்படத்தை திரையரங்கில் பார்ப்பது போல கனவு வந்துள்ளது. தனது கனவை நிஜமாக்க விரும்பிய அவர், உடனடியாக தியேட்டரில் ஒரு முழு காட்சியையும் (Show) மொத்தமாக முன்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது சொந்த பந்தங்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 217 பேரை ஒன்றுதிரட்டி, தியேட்டருக்கு அழைத்து வந்து ஒன்றாக அமர்ந்து படம் பார்த்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களையும், படக்குழுவினரையும் பெரும் வியப்பிலும் இன்ப அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டுத் திரும்பிய உறவினர்களில் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பேசுகையில், “இந்தக் கலியுகத்தில் எல்லைச் சாமி கருப்பசாமியைப் பற்றி இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுத்துள்ளார்கள், அதற்கே படக்குழுவினருக்குப் பாராட்டுகள். கனவில் வந்ததை நிஜத்தில் நடத்திக் காட்ட வேண்டும் என்று ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் வந்தோம். உறவுகளுடன் அமர்ந்து பார்க்கும்போது கண்ணீரே வந்துவிட்டது. ‘கருப்பு’ படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும், இது போன்ற படங்கள் இன்னும் அதிகமாகத் தமிழ் சினிமாவில் வரவேண்டும்” என்று தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
