CINEMA
18 வயதில் திருமணம், கருச்சிதைவு…”நான் தோற்றுவிட்டேன்!” – கண்ணீருடன் தமிழ்நாட்டை விட்டே வெளியேறும் பாடகி கெனிஷா…! நடந்தது என்ன …!
பாடகி கெனிஷா பிரான்சிஸ் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோரைச் சுற்றி கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கெனிஷா தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாகவும், சென்னையை விட்டு வெளியேறுவதாகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தொல்லைகளால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனி தனக்குத் தேவையான தனிமனித உரிமையை (Privacy) நண்பர்களும் ரசிகர்களும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தன்னை நல்லவளாக நிரூபிக்க இனி தான் முயலப் போவதில்லை என்றும், அமைதியாக இந்தச் சூழலில் இருந்து விலகிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் கடந்து வந்த துயரமான கடந்த காலம் குறித்துப் பேசிய கெனிஷா, சிறுவயதில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல், 18 வயதில் தோல்வியில் முடிந்த திருமணம், கருச்சிதைவு மற்றும் பெற்றோரின் இழப்பு எனப் பல இன்னல்களுக்கு மத்தியில், பார்களில் பாடித் தன் உழைப்பால் உயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “குடும்பத்தைக் கெடுத்தவள்” என்று தன் மீது சுமத்தப்பட்ட பழியை மறுத்துள்ள அவர், தான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி மனதளவில் உடைந்துபோய் இருந்தபோது, ஒரு தெரபிஸ்ட்டாக அவருக்கு உதவ மட்டுமே தான் முயன்றதாகவும், அதற்கு முன்பே அவர் தன் குடும்பத்தை விட்டு மனரீதியாக விலகி இருந்தார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்த ஒருவரைக் காப்பாற்ற நினைத்த தனக்கு, இந்த உலகம் பெரும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளதாகக் கெனிஷா வேதனை தெரிவித்துள்ளார். “உண்மையான அன்பு மற்றும் விசுவாசத்தை விடவும், பொய்யர்களையும் சூழ்ச்சி செய்பவர்களையுமே இந்த உலகம் அதிகம் நம்புகிறது” என்று பதிவிட்டுள்ள அவர், இறுதியாகப் பெண் வாதம் ஜெயித்துவிட்டதாகவும், ஆனால் தன் மகிழ்ச்சி தோற்றுவிட்டதாகவும் விரக்தியுடன் கூறியுள்ளார். இனி எந்தவிதமான விளக்கங்களோ, போராட்டங்களோ இருக்காது என்று கூறி, ரவி மோகனை இந்த உலகத்தின் போக்கிலேயே விட்டுவிட்டு, சென்னையை விட்டும் சமூக வலைதளங்களை விட்டும் கெனிஷா விடைபெற்றுள்ளார்.
