LATEST NEWS
என்னால இத ஏத்துக்கவே முடியல…”நீங்கள் செய்தது நியாயமா? இனி பட்டுத் திருந்துங்கள்!” – மேடையிலேயே கதறி அழுத சத்யராஜ்…கொளத்தூர் மக்கள் மீது பாய்ந்த கோபம்…!
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியைச் சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் இன்னும் ஓயாத விவாதப் பொருளாக நீடித்து வருகிறது. திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சி முடிவு, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின், தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்த நிலையில், நடிகரும் திராவிட இயக்க ஆதரவாளருமான சத்யராஜ் கொளத்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் மு.க. ஸ்டாலினின் தோல்வி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக மேடைகளில் நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் பேசும் சத்யராஜ், இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினின் தோல்வியைக் குறிப்பிட்டுப் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். “கொளத்தூரில் இந்த நிகழ்ச்சி நடப்பதால் பொதுமக்களாகிய உங்களிடம் இதைக் கேட்கிறேன், நீங்கள் செய்தது நியாயமா? கொளத்தூரில் தலைவர் வென்றிருக்க வேண்டும்; அவர் தோற்றதை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவர். அவரைத் தோற்கடித்துவிட்டீர்கள்; இனி பட்டுத் திருந்துங்கள், பட்டு அனுபவியுங்கள், அப்போதுதான் புத்தி வரும்” என்று தொகுதி மக்கள் மீது தனது கடுமையான கோபத்தையும் வருத்தத்தையும் கொட்டித் தீர்த்தார்.
சத்யராஜின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு அங்கிருந்த திமுகவினர் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்னால், தலைவரின் இந்தத் தோல்வியை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்த பின்பும், மு.க. ஸ்டாலினின் தோல்வி குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த நிலையில், தற்போது சத்யராஜின் இந்த மேடைப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு புதிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
