LATEST NEWS
“சொர்க்கம் இங்க தான் இருக்கா..? இப்படி ஒரு அழகைப் பார்த்திருக்கவே மாட்டீங்க..!” மும்பை – புனே சாலையில் கொட்டும் மழை.. நெட்டிசன்களை மயக்கிய வைரல் வீடியோ..!!
மும்பை-புனே விரைவுச்சாலையின் புதிய ‘மிஸ்ஸிங் லிங்க்’ பாதை, தற்போதைய தென்மேற்குப் பருவமழையால் சொர்க்கம்போன்ற எழில்மிக்கக் காட்சியாக மாறியுள்ளது. லோனாவாலா மற்றும் கண்டாலா பகுதிக்கு அருகில் படமாக்கப்பட்ட வைரல் காணொளி ஒன்றில், அடர்ந்த பனிமூட்டம், தாழ்வாக மிதக்கும் மேகங்கள் மற்றும் பச்சைப்பசேல் என இருக்கும் சஹயாத்ரி மலைச்சரிவுகளில் இருந்து கொட்டும் அழகிய அருவிகள் தத்ரூபமாகக் காட்சியளிக்கின்றன. சாலையின் ஓரத்திலேயே அணிவகுத்து நிற்கும் இந்த அருவிகளும் மேகக் கூட்டங்களும், இது மும்பை-புனே நெடுஞ்சாலைதானா அல்லது ஏதேனும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமா என்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
அடிக்கடி விபத்துகளும் நிலச்சரிவுகளும் ஏற்படும் கண்டாலா-லோனாவாலா காட் பகுதியைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘கபோலி-குஸ்கான் இணைப்பு’ திட்டமாகும். ராய்காட் மாவட்டத்தின் கபோலி பகுதியையும், புனே மாவட்டத்தின் குஸ்கான் பகுதியையும் இணைக்கும் இத்திட்டம் சுமார் 13.3 கி.மீ நீளமும்,.ரூ 6,695 கோடி மதிப்பீடும் கொண்டது. இதில் 10.55 கி.மீ நீளமுள்ள இரண்டு பிரம்மாண்ட சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் 650 மீட்டர் நீளமுள்ள கேபிள் ஆதரவு பாலம் ஆகியவை அடங்கும். இயற்கை வளம் நிறைந்த மாவல் பகுதி வழியாகச் செல்லும் இந்தப் பாதை, பயண நேரத்தைக் குறைப்பதோடு பயணிகளுக்குச் சஹயாத்ரி மலையின் கண்கவர் காட்சிகளையும் வழங்குகிறது.
https://www.facebook.com/reel/1412078640791607
அதேவேளையில், இந்த ‘மிஸ்ஸிங் லிங்க்’ பாதை தனது முதல் பருவமழைக் காலத்திலேயே சில சவால்களையும் எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஜூலை 6 அன்று பெய்த கனமழையால், 2-வது சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலான சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகே பாதை மீண்டும் திறக்கப்பட்டது. எனவே, இக்காணொளிகள் பாதையின் அழகிய பக்கத்தைக் காட்டினாலும், மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
