LATEST NEWS
“ஐயோ கொடுமையே.. மூட்டை மூட்டையாகக் கண்டுபிடிக்கப்பட்ட தமிழக அரசின் காலணிகள்..!” யார் செய்த துரோகம் இது..?! கல்வித்துறை அதிகாரிகளை அலறவிட்ட பகீர் வீடியோ..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரப் பகுதியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான இலவசக் காலணிகள் புதரில் கொட்டப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காகத் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் இந்த விலையில்லாக் காலணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டிய இந்த அரசுப் பொருட்கள், மூட்டை மூட்டையாகப் புதருக்குள் இரகசியமாகக் கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/PttvNewsX/status/2094326408415936772/video/1
அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இவ்வளவு பெரிய அளவிலான இலவசக் காலணிகளை, யார்… எதற்காகப் புதரில் கொண்டு வந்து கொட்டினார்கள்? என்பது குறித்துத் தெரியாமல் கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் திகைத்துப் போயுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், புதரில் வீசப்பட்ட காலணி மூட்டைகளைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் மாணவர்களுக்குச் சேர வேண்டிய காலணிகள் வீணடிக்கப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்துப் போலீஸார் பல்வேறு கோணங்களில் தங்களது தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
