CINEMA
அவரைப் பத்தி தப்பா பேசாதீங்க! கதறி அழுத ஜெயம் ரவிக்காக களத்தில் குதித்த ‘டபுள் டக்கர்’ இயக்குனர்…!”நாங்க அவமானப்பட்டப்போ அவர்தான் காப்பாத்தினார்…!
சமீபநாட்களாக சமூக வலைதளங்களில் நடிகர் ரவி மோகன் அவர்களின் குடும்பப் பிரச்சனைதான் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எப்போதும் திரையிலும் நிஜத்திலும் அமைதியாகவும், கலகலப்பான சிரித்த முகத்துடனும் காணப்படும் அவர், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தன் கட்டுப்பாட்டை இழந்து, கண்கலங்கியபடி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய வீடியோ பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் இத்தனை காலம் கம்பீரமாக வலம் வந்த ஒரு நாயகன் இப்படி மனதளவில் உடைந்து பேசுவதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவருக்குப் பெருமளவில் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், ‘டபுள் டக்கர்’ (Double Tuckerr) திரைப்படத்தின் இயக்குனரான மீரா மகதி, நடிகர் ஜெயம் ரவி குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிப் பேசப்படும் விஷயங்களுக்கும், அவரது நிஜப் பண்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் நேரில் பார்த்த ஜெயம் ரவி யார் என்பதை என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே சொல்லிவிடும்” என்று தொடங்கி, தங்களின் சினிமா பயணத்தில் அவர் செய்த பெரும் உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் மீரா மகதி குறிப்பிட்டுள்ளபடி, கடந்த 2024-ஆம் ஆண்டு ‘டபுள் டக்கர்’ திரைப்படம் உருவான காலகட்டத்தில், தாங்கள் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்ட குழுவாக இருந்ததால் சினிமாத்துறையில் பல அவமானங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. புதுமுக ஹீரோ, புதிய இயக்குனர் என்பதால் கோலிவுட்டில் அவர்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. படத்தின் கதை நன்றாக இருந்தும் கூட, பல முன்னணி கதாநாயகிகள் நடிக்க மறுத்ததோடு, பெரிய இசையமைப்பாளர்கள் சிலரை அணுகியபோதும் அவர்களுக்கு ஏமாற்றமும் மனவேதனையுமே மிஞ்சியதாக அவர் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
படம் எடுத்து முடிக்கப்பட்ட பின்னரும் கூட டீசர் வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு, ஆடியோ லான்ச் என ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் படக்குழு கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டது. படத்தின் கதாநாயகன் தீரஜ் ஒரு மருத்துவர் என்பதால் அவருக்குச் சினிமா உலகில் சில தொடர்புகள் இருந்தும், இக்கட்டான சூழலில் பலர் அவர்களது அழைப்பைக்கூட ஏற்க முன்வரவில்லை. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான இக்கட்டான சூழ்நிலையில்தான், எந்தவொரு பந்தாவும் இல்லாமல் தங்களுக்கு ஆதரவளித்து, தோள் கொடுத்த உன்னதமான மனிதர் ஜெயம் ரவி என்று இயக்குனர் மீரா மகதி தற்போதைய சூழலில் அவருக்கு ஆதரவாகத் தன் நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவிட்டுள்ளார்.
