CINEMA
அமைச்சர் ராஜ் மோகன் நியமனத்தில் அதிருப்தி…!”தயவுசெஞ்சு CM முடிவுகள்ல தலையிடாதீங்க…” – விஷாலின் 9 வருட ஆதங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்…!
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்ட அமைச்சராக ராஜ் மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்திருந்தார். சினிமா துறையில் 30 ஆண்டுகால அனுபவமிக்க முதலமைச்சர் விஜய்யே இந்தத் துறைக்கும் அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என விஷால் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். திரையுலகில் பல சீர்திருத்தங்கள் தேவைப்படும் வேளையில், சினிமா பற்றி எந்த அனுபவமும் இல்லாத ஒரு புதிய அமைச்சரிடம் தங்களின் கோரிக்கைகளை எப்படிக் கொண்டு சேர்க்க முடியும் என்றும், தயாரிப்பாளர்கள் ரத்தம் சிந்தி பிழைப்பு நடத்தி வரும் சூழலில் விஜய்யால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் தர முடியும் என்றும் விஷால் பதிவிட்டிருந்தார்.
விஷாலின் இந்தத் தனிப்பட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று, அதன்பின் உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்; தயவுசெய்து அரசாங்கத்தின் முடிவுகளில் தலையிடாதீர்கள்” என்று விஷாலைச் சாடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் திரையுலகைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நம்முடைய பிரச்சனைகள் நன்றாகவே தெரியும் என்றும், அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்பதால் அவரது முடிவுகளுக்கு மதிப்பளித்து, அதன் நல்விளைவுகளுக்காகக் காத்திருக்குமாறும் அருண் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அருண் விஜய்யின் இந்த முதிர்ச்சியான பதில், விஷாலின் விமர்சனத்திற்குத் தரப்பட்ட தகுந்த பதிலடி என இணையவாசிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். அமைச்சரவை அமைப்பது என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதால், அதில் தேவையின்றி தலையிடுவதைத் தவிர்த்துவிட்டுப் புதிய அரசின் செயல்பாடுகளுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற அருண் விஜய்யின் கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய அரசியல் சூழல் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
