LATEST NEWS
“ஏழைங்க இருக்குற நாட்டுல கார் ரேஸ் எதுக்கு…! திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற விவகாரம்…! ‘நலத்திட்ட நாயகனை’ வீழ்த்திய ‘ஆடம்பரம்’… சீனு ராமசாமி அதிரடி…!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், ‘திமுக 2.0’ என்ற இலக்குடன் கட்சியை மறுசீரமைக்க, தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தொண்டர்களிடம் அவர் வெளிப்படையாகக் கேட்டுள்ளார். இந்நிலையில், திமுகவின் தோல்விக்கான உண்மையான பின்னணி மற்றும் மக்களின் வெகுஜன மனநிலை குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள விரிவான பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைத்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலைத் துல்லியமாகக் கவனித்து வருபவன் என்ற அடிப்படையில் இக்கருத்தைப் பகிர்வதாகக் குறிப்பிட்டுள்ள சீனுராமசாமி, தற்போதைய முதலமைச்சர் விஜய் பதவியேற்றிருக்கும் சூழலுக்கும், அன்று ஸ்டாலின் பதவியேற்றபோது இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் மூன்று மாதங்களில் சாதாரண மக்களையும் எளிய முறையில் அணுகிய விதம், மக்களின் உள்ளத்தைத் தொடும் வகையில் இருந்ததாகப் பாராட்டியுள்ளார். மேலும், அவர் கொண்டு வந்த சிறப்பான நற்பணித் திட்டங்களால்தான் திமுக இந்தளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளதே தவிர, இந்தத் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் அல்ல; அவர் ஒரு ‘நலத்திட்ட நாயகர்’ என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், திமுகவின் வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் சில செயல்பாடுகள் மக்களின் வெகுஜன மனநிலைக்கு எதிராக அமைந்ததுதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று கருதும் ஒரு நாட்டில், சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் ரேஸ் போன்ற ஆடம்பர விழாக்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் மனநிலையைப் புண்படுத்தியதாக உதாரணம் காட்டியுள்ளார். எதைச் செய்தாலும் மக்களின் பொதுவான மனநிலையைக் கருத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும் என்றும், அந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில தவறான விஷயங்கள் இங்கு அரங்கேறியுள்ளன என்றும் சீனுராமசாமி தனது பதிவில் விவரித்துள்ளார்.
இறுதியாக, இந்தத் தவறுகள் முதலமைச்சர் ஸ்டாலினால் நடக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய இயக்குநர், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகமே முன்னின்று வியாபாரம் செய்கிறது என்ற ஒரு எதிர்மறையான தோற்றத்தை சில காரியங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வியாபாரத் தோற்றம் எப்படியெல்லாம் உருவானது என்ற கோணத்தில் தலைவர் ஸ்டாலின் அணுகினாலே அதற்கான விடைகள் எளிதாகக் கிடைத்துவிடும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். தோல்வியிலும் சோர்வடையாமல் இயங்கும் ஸ்டாலினைத் தான் பாராட்டுவதாகவும் கூறி சீனுராமசாமி முடித்துள்ள இப்பதிவு, திமுகவின் உட்கட்சி மறுசீரமைப்புக்கு மிக முக்கிய ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது.
