LATEST NEWS
விவசாயிகளுக்கு மிரட்டல்…! லஞ்சப் புகாரில் சிக்கிய கடலூர் மாவட்டப் பிரமுகர்… அதிரடி ஆக்ஷன் எடுத்த தவெக தலைமை…. கட்சிப் பொறுப்புகள் பறிப்பு…!!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில், லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தைத் தருவோம் என்ற முதலமைச்சர் விஜய்யின் கொள்கைக்கு மாறாகக் கடலூரில் ஒரு விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஏரியிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்காக அங்கிருந்த உள்ளூர் விவசாயிகளிடம், தவெகவின் கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளராகப் பதவியில் இருந்த புலவேந்திரன் என்பவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் கொதித்தெழுந்த விவசாயிகள் புலவேந்திரனின் காரைச் சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். விவசாயிகளை அச்சுறுத்திப் பணம் பறிக்க முயன்ற தவெக நிர்வாகியின் இந்தச் செயலுக்குத் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தன.
கட்சியின் மாண்பிற்கும், தலைவரின் நற்பெயருக்கும் பெரும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கட்சித் தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அவசர ஒப்புதலுடன் புலவேந்திரன் தற்பொழுது கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்துக் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், புலவேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவரோடு கட்சி நிர்வாகிகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
