LATEST NEWS
“தோல்வி பாரத்ததால் வந்த மன உளைச்சல்…” ஆ.ராசாவை நேருக்கு நேர் சாடிய அமைச்சர் வன்னி அரசு… திமுக-விசிக இடையே முற்றும் மோதல்…!!
அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இதுவரை இணக்கமாக இருந்த திமுக கூட்டணி முற்றிலும் சிதைந்துள்ள நிலையில், தங்களுக்குள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா விமர்சனம் செய்ததற்கு, தற்போதைய புதிய அரசின் அமைச்சரான வன்னி அரசு ராணிப்பேட்டையில் வைத்துச் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் தோல்வியின் காரணமாக ஆ.ராசா கடும் மன உளைச்சலில் உளறிக் கொண்டிருப்பதாகச் சாடிய அவர், பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பேசும் விசிக மற்றும் கம்யூனிஸ்டுகளைத் தாக்குவதன் மூலம், திராவிடப் பேரியக்கமான திமுகவை அவர் பாஜகவின் பாதையில் இழுத்துச் செல்கிறாரோ என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, தற்போதைய முதலமைச்சர் விஜய் எல்லோருக்குமான பொதுவான தலைவராகத் திகழ்கிறார் என்றும், அவர் அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கமான உறவைப் பேணுவதில் எவ்விதத் தவறும் இல்லை என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், சமூக நீதியின் முக்கிய அங்கமான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விசிகவின் அதே நிலைப்பாட்டைத் தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வலியுறுத்துகிறார்.
அதற்காக அவர் முதலமைச்சரை நேரில் சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய முதல்வர் விஜய் மிகுந்த அரசியல் தெளிவோடு, இடதுசாரிக் கொள்கைகளை உள்வாங்கி அவர்களுடன் இணைந்தே சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று பாராட்டியுள்ள அமைச்சர் வன்னி அரசு, திமுகவின் இந்த வீண் அவதூறுகளின் பின்னணியில் பாசிச அரசியல் மறைந்திருப்பதாகக் கடுமையாக விவரித்துள்ளார்.
