Uncategorized
3 மாதமாவது தாங்குமா த.வெ.க ஆட்சி…? ஸ்டாலின் அப்படி சொல்லவே இல்ல… நடந்தது இதுதான்… விமர்சனங்களுக்கு தங்கம் தென்னரசு விளக்கம்…!!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் பேசும்போது, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் புதிய ஆட்சி மூன்று மாதங்களாவது தாங்குமா என்ற கேள்விக்குறியுடன் நகர்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட சிலர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மூன்று மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று பேசுவது தவறானது எனத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தி.மு.க தலைவர் பேசியதன் உண்மைப் பொருளைத் திரித்து தவறான செய்திகளைப் பரப்பி வருவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது விளக்கத்தில், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் ஆளுங்கட்சியினரே சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய அவலங்களை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்ற நோக்கில், “ஆட்சி 3 மாதமாவது தாங்குமா?” என்ற பொதுமக்களின் ஆதங்கத்தையே ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டினார் என்றும், மாறாக ஆட்சியைப் பலவந்தமாகக் கவிழ்க்கும் எண்ணம் தி.மு.க-விற்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளால் வாக்களித்த மக்களே அதற்குள் கடும் அதிருப்தியடைந்து களைத்துப் போய்விட்டனர் என்பதைத்தான் தங்களது தலைவர் வெளிப்படுத்தினார் என்று தங்கம் தென்னரசு தனது பதிவில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
